பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்;
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”

என்று புறநானூறு பேசும்.

வாழ்க்கையில் போற்ற வேண்டிய தலையாய செல்வம் அன்பு. உலக மொழிகள் அனைத்தும், உலக மதங்கள் அனைத்தும், ஒருசேர மாறுபாடின்றி உரத்த குரலில் கூறுவது ‘அன்பு செய்’ என்பதேயாம்! அன்பின் மூலம் மண்ணகத்தில் விண்ணகத்தையே காண முடியும். பல்வேறு வகைப்பட்ட மனிதகுலத்தை இணைத்தற்குரிய ஒரே கருவி அன்புதான்! அன்பு, மனிதரை ஒழுக்கமுடையவராக ஆக்கும். அன்பிற்கு இணை அன்பே அன்பிற்கு விலை அன்பே இத்தகைய உயர்ந்த அன்பை நிறையப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரதமராயிருந்த லார்டு பாமர்க்ஸ்டன் என்பவர், “கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிற நேரத்தில், உங்கள் சுற்றுப் புறத்திலுள்ள அழுக்குகளையெல்லாம் அப்புறப்படுத்துங்கள்” என்று கூறினார். கடவுளின் படைப்புகளுக்கு நன்மை செய்யாமல், இவ்வுலகத்தை, இயக்கும் கடவுளின் குறிக்கோளுக்கு அரணாக இல்லாமல் அவரை நோக்கிப் பிரார்த்த்னை செய்வதன் அறியாமையை இந்த உரை புலப்படுத்துகிறது. நமது திருமூலரும்,

“நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயில் படமாடுங் கோயில் பகவற்கஃதாமே”

என்று கூறியதையும் எண்ணுக. ஆதலால், உள்ளத்தில் அன்பை நிறைத்திடுக! யார் மாட்டும் அன்பு காட்டுக! அன்பெனும் புனலால் வளமான வாழ்க்கையைப் படைத்திடுக!