பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

155


பேசுவதில் உள்ள ஒரு நன்மை, பேசிய உண்மையை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், உண்மையைச் சார்ந்து பின் எதிர்விளைவுகள் வருவதில்லை. ஆதலால், வாய்மை மேற்கொண்டொழுகுதல் எளிது! எளிது!

மூட நம்பிக்கைகளை எல்லாம் அகற்ற வல்லது உண்மையேயாம். நாம் பெற்றுள்ள சுதந்தரத்தை நிலையாக அனுபவிக்க வேண்டுமானால் நம்நாட்டு மக்களிடத்தில் உண்மை பேசுதல், மற்றவர்களுக்கு உண்மையாக இருத்தல் ஆகிய நற்பண்புகள் இருந்தால்தான் முடியும். சுதந்தரத்தின் பயனும் உண்டு. இல்லையெனில், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்பது என்றும் மாறாதது; எப்பொழுதும் மாறாதது. உண்மைக்கு அதிக ஆற்றல் உண்டு. அண்ணல் காந்தியடிகள், “சத்தியமே கடவுள்” என்றார். நாம் சத்தியத்தில் நின்று ஒழுகுகின்றோம் என்பதற்கு எடுத்துக்காட்டு, சொல்லும் செயலும் ஒன்று போலிருத்தலாகும். சொல்லிற்கும் செயலிற்கும் இடையே வேறுபடுதல் மிகவும் தீயது என்று திருக்குறள் கூறும்.

“கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு”

என்பது வள்ளுவம். ஆதலால், அகமும் புறமும் ஒத்த நிலையில் ஒழுகியும் பேசியும் வளமான வாழ்க்கையைக் காண்போமாக!

இங்ஙனம் வளர்ந்த வாழ்க்கை, சால்பு நிறைந்த வாழ்க்கை. இத்தகைய சால்பு நிறைந்த வாழ்க்கையே உலக வரலாற்றுக்கு நிலைக்களன். இம்மாபெரும் உலகம் நிலைத்து நின்று இயங்குவதற்குரிய ஆற்றல்.

வாழ்க்கையின் நோக்கம் அல்லது பயன் இன்ப அன்பினை எய்துதல் என்பர். இதனையே ‘முத்தி’ என்றும் ‘வீடுபேறு’ என்றும் கூறுவர். விடுதலை பெறுதல் வீடுபேறு.