கடவுளைப் போற்று! மனிதனை நினை!
189
மண்ணின் வளத்திற்கும் உயிர்கள் உண்டு களித்து மகிழற்கும் பொருள்கள் தோற்றத்திற்கும் இன்றியமையாததாகிய மழை பெய்யவேண்டும். மழை பெய்தால் போதுமா? வளம்பல கொழிக்கவேண்டும். வான் மழை பெய்தாலும் வளம்பல கொழித்தாலும் முறையான அரசு இல்லையாயின் வல்லார்கள் உண்டு கொழுப்பர். மெலியார்கள் வாடுவர். ஆதலால் வல்லார்கள்பால் சாராத முறையான பங்கீட்டினைச் செய்யும் அரசு தேவை. உயிர்கள் யாவும் யாதொரு குறையுமில்லாது வாழவேண்டும். “குறைவிலாது உயிர்கள் வாழ்க!” என்னே இலட்சியம்! உயிர்கள் யாவும் பெறுவனவெல்லாம் துய்த்து யாதொரு குறையும் இன்றி வாழ வேண்டும். இந்தச் சாதனைகள் நடந்தால்தான் அறங்கள் நடைபெறும்; தவம் இயற்றப்பெறும்; மனித குலத்தில் இன்றியமையாத நீதியும் நிலவும். இது கச்சியப்பர் காட்டும் சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு.
இத்தகைய சமுதாய அமைப்பைக் காணச் சமயம் ஈடுபட்டால்தான் அது சமயம்; வாழ்விக்கும் சமயம் ! இல்லையானால் சமயம் ஒரு பிழைப்பு. அது காலப் போக்கில் வரலாற்றுப் புதைமணலில் புதையுண்டு போகும். புதிய சமயநெறியைப் புத்துலகம் படைக்கும்.
இந்தியா பரப்பளவில் ஒரு பெரிய நாடு. பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ந்து வரும் ஒரு நாடு. இந்தியாவின் பழமை, பரப்பளவு இவைகளின் அளவுக்கு வேற்றுமைகளும் உண்டு. இவ்வேற்றுமைகளில் பல, காலத்தின் தேவையாகத் தோன்றியவை. அதாவது இமயத்தின் அடிவாரத்தில் வாழ்வோனுக்கும்