பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இங்ஙனம் கூறுவதால் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதாகவோ சாதி வேற்றுமை தீங்கிவிட்டதாகவோ நாம் எண்ணுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது, இத் துறையில் நாம் சாதிக்கவேண்டியன நிறையவே இருக்கின்றன. அதற்குரிய பணிகளில் நாம் தொடர்ந்தே ஈடுபட்டு வந்துள்ளோம். இனிமேலும் ஈடுபடுவோம். ஆதலால் மத மாற்றம் குறித்து அவர்கள் எண்ணுவதையே கைவிடுவதுதான் சரியான நெறி.

அண்மையில் மீனாட்சிபுரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மத மாற்றங்களுக்குரிய காரணங்களை ஆராய்ந்தபொழுது, சாதி வேற்றுமைகள் காரணம் என்பதை விட அரசுத்துறையில் காவல் துறையில் ஈடுபட்டிருந்த சிலர் அத்துமீறி நடந்ததே காரணம் என்பது புலப்படுகிறது. தற்செயலாக வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் குறிப்பிட்ட சாதியினரைச் சார்ந்தவர்களாக இருந்துவிட்டால் இந்து அரிசனச் சகோதரர்கள் அதைச் சாதிக் கலவரம் என்று கருதுகின்றனர். பத்திரிகைகளும் அதுபோலவே செய்திகளை வெளியிடுகின்றன. இது தவறு. பொதுவாக அண்மைக் காலமாக காவல்துறை நாடு தழுவிய முறையில் வரம்பிகந்த செயல்களில் ஈடுபடுவதாகக் காண்கிறோம். பகல்பூரில் இளைஞர்களின் கண்ணைப் பறித்ததைவிடக் கொடுமையான செயல் ஒன்று இந்த நாட்டில் நடந்ததுண்டா? ஆதலால், அரசை-அரசின் தவறான செயல்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அந்தக் காவலர்கள் எந்தச் சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்களோ அந்தச் சாதியை அல்லது அந்த மதத்தை எதிர்த்துப் போராடுவது நெறியன்று. ஆதலால் கட்டுங்கடங்காமல் செல்லும் காவல் துறையினரின் அத்து மீறிய செயல்களுக்குக் கண்டனம் தெரிவிப்போம். குடி தழுவிய ஆட்சியைக் காணும் முயற்சியில் ஈடுபடுவோம்.