பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அன்பு ஆற்றல் மிக்கது. உடலும் உடலைச் சார்ந்துமே (அறிவியலைச் சாராமல் உடலை மட்டுமே சார்ந்தது) வாழ்கிறவர்கள் தன்னலமிக்குடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அன்பு செய்யத் தெரியாது. தியாகம் என்பதும் தொண்டு என்பதும் இவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ஆன்மாவைச் சார்ந்து வாழ்பவர்கள் சற்று வளர்ந்தவர்கள். இவர்களிடம் தன்னலம் கட்டுப்பாட்டிற்குள் அடங்குவதாக இருக்கும். ஏன் நல்லவர்களாகக் கூட இருப்பர்; ஆனாலும் அதிகாரப் பசி இருக்கும்; இவர்களும் மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். ஆனால் இவர்களை அடக்கியாளவே. அதாவது தற்சார்புடன் கூடிய-அன்பு காட்டுவர். இது பயன் அற்றது; விளைந்த அன்பும் அல்ல. கடவுளைச் சார்ந்து கடவுளின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு வாழ்தல் அன்பின் களம்; ஞான வேள்வி. இத்தகையோர் தமக்கென முயலார்; பிறருக்கெனவே முயற்சிகள் செய்து உழைக்கும் நோன்புடையவர்கள். இந்த வாழ்வு புகழ் இயல் வாழ்வு; தவம் நிறைந்த வாழ்வுமாகும்.

“இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலா தவர்”

-என்னும் திருக்குறள் நினைவு கூரத்தக்கது.

ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் கடவுளின் ஆளுகைக்கு அடங்குவர்; கடவுளின் சிறந்த இயல்புகளைப் பெற்று வாழ்க்கையில் காட்டுவர்; உயிர்க் குலத்தை நேசிப்பர்; வாழ்வித்து வாழ்வர். இந்த ஆன்மிகம் இந்தியாவின் வழிவழி வளம்; உடைமை.

இவற்றைப் பேணிக் காப்பதிலேயே நமது எதிர் காலத்தின் சிறப்பு அமைந்திருக்கிறது.