பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள் என்றால் நாமும்கூடக் காலத்தை வென்றவர்கள் தாம்.

சைவ சித்தாந்த சமய நெறியின்படி உயிர்கள் என்றும் உள்ளவை. அவைகளுக்கும் பிறப்பில்லை. இறப்பில்லை. உயிர்கள் உடல்தாங்கி உலா வருதலையே பிறப்பு என்கிறோம். உயிர்கள் உடலை இழத்தலை “இறப்பு” என்றும், புதிய உடல் பெறுதலைப் “பிறப்பு” என்றும் கூறுகிறோம். சைவத்தின்படி உயிர்களுக்கு முத்தி நிலையிலும்கூட அழிவில்லை. இறைவனுங்கூட உயிர்களை ஆட்கொள்வான் வேண்டி, பல திருமேனிகளை எடுக்கிறான், பல பெயர்களைப் பெறுகிறான். ஆதலால், இறைவன் காலத்தை வென்றவன் என்பதற்குப் பொருள் பிறப்பில்லாதவன்இறப்பில்லாதவன் என்பது மட்டுமாக இருக்கமுடியாது. அந்தத் தகுதி நமக்குத்தான் இருக்கிறதே. ஏன்? நம்மை அலைக்கழிக்கும் ஆணவத்திற்குங்கூட அந்தத் தகுதி உண்டு. அப்படியானால் காலத்தை வென்றவன் என்பதற்கு என்ன பொருள்? இறைவன் காலத்தை வென்றவன் என்பதற்குரிய பொருளை மாணிக்கவாசகர், மிக அருமையாக விளக்குகிறார். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்ற திருப்பாடல் காலத்தை வென்றமைக்கு இலக்கணம். ஆம். காலம் சுழல்கிறது. சுழன்று கொண்டேயிருக்கிறது. காலத்தின் தேவைகள் மாறுகின்றன; மாற்றம் உலக இயற்கை, மாறாதது தேங்கும்; மூப்படையும்; முதுமையடையும்; பாழ்படும்.

இறைவனைப் பொறுத்தவரையில் தேக்கமில்லை. அவன் காலத்தினும் கடிதாக விரைந்து தொழிற்படுகின்றான். அவன் உயர்ந்து அருமையாகப் பூசனைகள் பெறுவதும் உண்டு.