பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்து மொழிகள்

389



வேதம் ஓதி விழிநீர் பெருக்குவதைப் போலவே திருமுறைகளை ஒதியும் விழிநீர் பெருக்கலாம். திருமுறைச் செல்வர்களின் ஒருவரான மணிவாசகப் பெருமான் “நானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அரற்றி அழுது அருளார் அமுதம் பெற்றார். அழுவதற்கு உள்ளம் உருக வேண்டும்; உணர்ச்சி கசிய வேண்டும். அவைகளின் நெகிழ்ச்சிக்குத் தாய்மொழிதான் உதவும். எந்த மொழி வல்லுநனும் தன்னையொட்டிய சிந்தனையைத் தன் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறான். அதைப்போல் நம்மைச் சார்ந்த வழிபாட்டுச் சிந்தனையும்-சிந்தனை வெளிப்பாடும் நமது தாய் மொழியிலிருந்தால் நலம் பயக்கும்.

தமிழருக்குச் சொந்தமான சில தகைமை இருப்பது போல, இறைவனிடத்தில் சொந்த மொழிவழித் தொடர்பும் இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் எம்மை வேற்று மொழி வெறுப்பாளர் என்று எண்ண வேண்டாம். மொழித் தொடர்பினால்-காலத்தால் மூத்த சமய குரவர்கள் சிறப்புற வாழ்ந்ததுபோல நாமும் வாழ வேண்டுமென்ற விருப்பு நமக்கு உண்டாக வேண்டும். வேற்று மொழியை ஆதரித்து நமது மொழியைப் போற்ற வேண்டும். வடமொழியில் வேதம் என்பதை, நாம் மறை என்று தமிழ் ஆக்குகிறோம். வேதம் என்பது வேய்தல். அதாவது மூடுதல் எனப்படும். ஆணவத்தை மூடி மறைக்க வேதங்கள் உதவுகின்றன. நமது தாய்மொழியில் முகிழ்ந்த வேதமாகத் திருக்குறளைக் கருதுகிறோம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களைத் தர எழுந்த வேதம் குறள். தமிழில் பெரும் பெரும் வேதங்கள் உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் கடல் கோள்களினாலும் பூகம்பங்களினாலும் அழிந்து மறைந்திருக்கலாம். இப்போது நமக்கு உதவுவன திருமுறைச் செல்வங்களே. இச்செல்வங்கள்கூட மூடி மறைக்கப்பட்டிருந்தன. சிலர் தம் ஆதிக்க வாழ்வு ஆட்டங்கண்டு விடுமென்றஞ்சித்