பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகும். இதுவே, வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய மாறுதல் என்று சமயங்கள் ஒரு குரலில் ஓதுகின்றன.

உயிர்க்கு உறுதியினைத் தந்து, ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தினைத் தந்து வாழவைக்கும் குணங்கள் பலப்பல. அவையனைத்துள்ளும் அன்பு என்ற குணம் மிகமிகச் சிறந்தது. அன்பு, துன்ப நோய்க்கு மருந்தாகவும் இருக்கிறது. இன்ப விளைவுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. அன்பு தன்னைக் கொண்டவனையும் மகிழ்விக்கிறது. சார்ந்தோனையும் மகிழ்விக்கிறது. ஏன்? எல்லாம் எல்ல இறைவனையும் கூட அன்பே மகிழ்விக்கிறது; இல்லை, அன்பு அவனைப் பைத்தியமாக்கி விடுகிறது. ஆண்டவனாகிய அவன் அன்பிற்கு அடிமையாகின்றான்; இரப்பாரைக் காப்பவன். இரப்பவனாக மாறுகின்றான். என்னே, அதிசயம்! இந்த அன்பினை உலகத்தின் சமயங்கள் பலவும் வாழ்த்துகின்றன. அன்பினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வையத்திலுள்ளோரை வழி நடத்தும் புதுமையைபொதுமையை என்னென்போம்.

உலகினரின் பாவத்தைத் தமது செந்நீரால் கழுவிய ஏசுபெருமான் அன்பின் திருவுருவம். அவரருளிய மலைச் சொற்பொழிவு அன்புப் பொழிவு. “ஒருவரையொருவர் அன்புகொண்டு ஒழுகுங்கள்; பகைமை பாராட்டாதீர்கள்; மன்னிக்கும் குணத்தினைப் பெறுங்கள்; எல்லோருக்கும் எப்பொழுதும் அன்பு காட்டுங்கள்” என்று வையகத்தை வழிநடத்தினார். ‘கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் மீது கருணை பொழியப்படும் என்ற விவிலிய அறவுரை எண்ணத்தக்கது. அர்ச் ஃபிரான்ஸஸ் என்ற பெரியார் ‘இறைவா, நான் அன்பு விதையை விதைப்பேனாக’, என்றும் ‘மக்கள் என்னிடம் அன்பு செலுத்துவதற்கு முன், நான் அவர்களிடம் அன்பு காட்டுவேனாக’ என்றும் கூறியுள்ள உரை உணரத்தக்கது.