பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/441

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

429



முகமது சாகேபின் அருள் வாக்குகளில் அன்பின் நலம் சிறந்து விளங்குகிறது. பிறரிடம் அன்பு பாராட்டாமலும் பிறர் அன்புக்குப் பாத்திரமாகாமலும் இருப்பவனிடம் நற்குணங்களே இரா” என்பது முகமது சாகேபின் அருள் வாக்கு “கடவுள் படைப்பிலுள்ள மக்கள் அனைவரையும் தம் பிள்ளைகளைப்போற் கருதி அனைவர் இன்ப துன்பங்களையும் ஒருவன் எப்பொழுது தனதாகக் கருதுகிறானோ அப்பொழுதே அவன் ஸீபி ஆவான்” என்பதும் அருள் வாக்கு. மாந்தர் குலம் ஒன்றே என்பதும் அவர்கள் அனைவரும் ஒரு குலமாக வாழக் கடமைப்பட்டிருக்கின்றனர், என்பதும் புனித குர்-ஆனின் உபதேசம். “அல்லா மிகுந்த தயை உள்ளவர், கருணைக் கடல், கிருபா சமுத்திரம், பரமதயாளு” என்பதே புனித குர்-ஆனின் வாசகம். ஆதலால் உலகத்து உயிர்களுக்கு யாரால் அதிக இன்பம் கிடைக்கிறதோ அவர்களையே அவர் அதிகமாக நேசிக்கிறார் என்பது இஸ்லாமிய மதத்தின் இணையற்ற கொள்கை.

ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் சீனநாடு. சீன தேசத்தில் கன்பூஷீயஸ் என்ற ஞானி தோன்றினார். அவர் ஒரு சமயத்தைத் தோற்றுவிக்காது போனாலும் அவர் சீன நாட்டில் பல நூற்றாண்டுகள் ஒரு சமய ஞானியாகவே பாராட்டப் பெற்றார். அவர் வாழ்க்கையின் மூல தத்துவமே அன்புதான் என்று குறிப்பிடுகிறார். அவர் ‘எல்லா மனிதர்களையும் விரும்புவதும் ஒவ்வொரு மனிதரிடமும் நேசமாய் இருப்பதுந்தான் அன்பு’ என்றும், நாம் “அன்பு காட்டுவதும் அன்பிற்காகவே காட்ட வேண்டுமேயொழிய பிறிதொரு நன்மைக்காகக் காட்டக் கூடாது” என்றும் கூறுகிறார், கன்பூஷியஸ் இந்த அன்பு நெறி மக்கள் மன்றத்தில் நிலவ ஒரு மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

“உனக்குப் பிடிக்காத ஒன்றை, நீ பிறருக்குப் பிடிக்குமென்று நினைந்து செய்யாதே"