பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/504

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“அனைத்துலகும் ஆனானை” என்றும், “உலகமெல்லாம் ஆயவனை” என்றும், “உலகானானை” என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார்கள். சிவநெறியில் சிவலிங்க வழிபாடே. தொன்மை வழிபாடு. சிவலிங்க வழிபாட்டின் பரிணாம வளர்ச்சி. இறைவன் உலகமாக இருக்கிறான் என்ற அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் பானம் உலகத்தின் சின்னமே யாகும். இறைவன் உலகமாக இருக்கிறான் என்பதைவிட அப்பரடிகள் எல்லா உலகமும் இறைவனானான் என்றே குறிப்பிடுகிறார். ஆனால், உலகத்தை இறைவனாகக் கருதி வழிபாடு தோன்றிற்றென்றும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. இங்ஙனம் ஆராய்ந்து பார்க்கும்பொழுது உலகம் பற்றிய கருத்தில் லெனினியத்திற்கும், தமிழிலக்கிய மரபிற்கும் மிகுதியும் முரண்பாடில்லை.

உலகம் படைக்கப் பட்டதன்று இயற்கையானது என்ற செய்தியை முன்னால் ஆராய்ந்தோம். அந்த வகையில் லெனினியத்துக்கும் தமிழ் மரபுக்கும் முரண்பாடின்மையையும் கண்டோம். ஆயினும், இந்த உலகத்தின் இயக்கம் - மாறுதல்-வளர்ச்சி ஆகிய தொழிற்பாடுகளைப் பற்றி நாம் ஆராய வேண்டியதிருக்கிறது. இந்த உலகத்தின் தொழிற்பாட்டில் ஓர் ஒழுங்கும் முறை பிறழாத நிகழ்ச்சியும் இருப்பதைக் காண்கிறோம். இந்த ஒழுங்குமுறை உலகத்திற்கு எப்படி கிடைத்தது: அஃதும் இயற்கையா? உலகம் சடப் பொருளா? அல்லது உயிர்ப் பொருளா? அல்லது இரண்டும் கலந்த பொருளா? சடப் பொருளுக்கு மாறுதலும் வளர்ச்சியும் உண்டா? என்ற ஏராளமான வினாக்களுக்கு விடை காண்பதில் உலகிடை நிலவும் தத்துவங்கள் அனைத்தும் முரண்படுகின்றன. சிசரோ என்ற பேரறிஞன், இந்த உலகத்தின் நிகழ்வு முறைகளில் மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட செயல் முறைகளைப் பார்க்கிறோம். உலகத்தின் நிகழ்வுகளில் ஒரு மாறா முறைவழிப்பட்ட