பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

67



சிற்பக் கலையில் வளர்ந்து மகிழ்ந்த செந்தமிழ் மக்கள், வானவில்லின் வண்ணங்களில் திளைத்திருப்பர் போலும்! வண்ணப்பூச்சுக் கலையில் தமிழர்கள் வளர்ச்சி பெற்று, ஓவியக் கலையினைக் கண்டனர். “ஓவத்தன்ன வினைபுனை நல்இல்” என்று அகநானூறும், “ஓவுக் கண்டன்ன இல்” என்று நற்றிணையும் கூறும். ஆதலால் சங்க காலத்திலேயே ஓவியக்கலை தமிழகத்தில் சிறந்திருந்தது என்பதை அறியலாம். ஓவியமும் நுண்கலைகள் வரிசையைச் சேர்ந்தது. திருக்கோயில் முழுதும் தூய்மையாகவும் அழகாகவும் எடுப்பாகவும் விளங்க வண்ணப்பூச்சு செய்யப் பெற்றது. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் உட்புறச் சுவரில் நாயன்மார்கள் வரலாறு, ஓவியமாய் வரையப் பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை விரிவாகச் சித்திரித்துக் காட்டும் வண்ண ஓவியங்கள் மிகச்சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. சிவன்-பார்வதி முன்னிலையில் தேவமாதர்கள் நடனமாடு கின்றனர். இரண்டு நாயன்மார்களும் அதைக் கண்டு களித்த வண்ணம் உள்ளனர். இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓவியங்களிலெல்லாம் சிறந்த ஓவியம் திரிபுராந்தகச் சிவன் கதையைச் சித்திரித்துக் காட்டும் ஓவியமே! திரிபுராந்தகச் சிவனுருவத்தில் ரெளத்திரம், வீரம், கருணை முதலிய மெய்ப்பாடுகள் அற்புதமாகத் திட்டப்பெற்றுள்ளன. இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் வண்ணக்கலவை மிகமிக உயர்ந்தது. இன்றும் இந்த ஓவியங்கள் உயிரும் அழகும் நிரம்பியவையாக விளங்குகின்றன. ஓவியத்திற் சிறந்து விளங்கும் இந்தத் திருவுருவங்கள் பக்தர்களிடத்தில் சிறந்த பத்திமை உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது வெள்ளிடைமலை. ஓவியத்திற்கும் ஆடற் கலைக்கும் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கருவறையைச் சார்ந்த அந்த உட்சுவரே தாயேடு! சித்தன்னவாசல் வண்ண ஓவியங்களும் நினைவு கூரத்தக்கவை. தமிழகத்தில் பல்வேறு.