பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயில்களில் அருளார்ந்த நாயன்மார்கள் மற்றும் தல புராண வரலாறுகள் சிறந்த வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. அந்த ஒவியங்களின் வண்ணப் பூச்சுகள் இன்றளவும் மாறாமல் ஒளிமயமாய் விளங்குவன. தமிழகத்தின் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஓவியக் கலையின் சிறப்புக்குச் சான்று. இந்த ஒவியங்களெல்லாம் நம்மனோர் வாழ்க்கையை ஓவியமாய் விளங்கச் செய்வதற்குத் துணையாய் அமைவன.

உயிர், உடலோடு இயைந்து இயங்குகிறது. உடம்புஉயிர் கூட்டு வாழ்க்கையே வாழ்க்கை இந்த வாழ்க்கை இடையீடின்றி இயங்குவதற்கு உயிர் தேவை. அதனாலேயே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று கூறினர். திருக்கோயிலைச் சார்ந்து நல்ல சமையற்கலையும் உணவுப் பழக்கமும் வளர்ந்தன. நல்ல வண்ணம் நலமுடன் வாழ்வதற்கு, எவ்வகை உணவு ஏற்றது. என்பதெல்லாம்கூட திருக்கோயில் திருவமுதுப் படையல் மூலம் நாடு கற்றுக் கொள்ள முடிந்தது. இன்னின்ன பொழுதில் இன்னின்ன உணவு என்றெல்லாம்கூட வரையறை செய்தனர். இன்று, புரதச்சத்து அடங்கிய பயறு வகைகளே உணவில் இன்றியமையாதவை, உடல் ஆற்றலுக்குத் துணை செய்பவை என்கின்றனர். நம்முடைய திருக்கோயில்களில் பயறு வகைகளில் ஒன்றான சுண்டல், திருவமுதுப்படையலில் முக்கிய இடம் பெற்றதை எண்ணுக, நலமான வாழ்க்கைக்குப் பழங்கள் உண்ணும் பழக்கம் தேவை. திருக்கோயிற் பூசை பழமின்றி நிகழாது. இங்ஙனம் உடலில் உயிர் பேணும் திறனைப் பெறுதற்குரிய கலையாகிய சமையற் கலைக்கும் சமயமே துணை செய்தது; வழிகாட்டியது. திருக்கோயில் திருவமுதுப் படையல் நெறிமுறைப்படி, ஒருவன் உண்டு வருவானாகில் அவன் நெடிய நாள் வாழ்வான்; நோயின்றி வாழ்வான்!