பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

69



கூடி வாழ்தல் ஒரு கலை. கூடி வாழ்தலுக்கு ஒரு மையம் வேண்டும். பழந்தமிழர் வாழ்க்கையின் மையமாகத் திருக்கோயிலே விளங்கியது. நடுவூருள் திருக்கோயில்; நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழும் ஊர் என்று நம்முடைய நாட்டில் ஊர்கள் அமைந்தன. இதுவே திருக்கோயிலைச் சார்ந்து ஊர்கள் இயங்கின என்பதற்குச் சான்று. தமிழ் மக்களின் சமய மரபுப்படி கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டுமின்றி வாழ்வுப் பொருளாகவும் விளங்குபவர். அன்றைய தமிழ் மக்கள் வாழ்க்கையின் நன்மை, தீமை ஆகிய அனைத்தையும் திருக்கோயிலை மையமாகக் கொண்டே செய்தனர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் விண்ணப்பித்து, அவன் திருவுளம் அறிந்தே செய்தனர். சுந்தரர் திருமணம், திருக்கோயிலின் சூழலில் இறைவனே முன்னின்று செய்துவைக்கப் பெற்றது ஓர்ந்தறிக. ஆலயச் சுற்றிற்குள் அழுத குழந்தைக்குப் பால் கிடைத்தது என்பதைத் திருஞான சம்பந்தர் வரலாற்றால் உயத்துணர்க! அப்பரடிகள் குடரோடு துடக்கி முடக்கியிட்ட சூலை நோயிலிருந்து திருவதிகைத் திருக்கோயிற் சூழலில், திருவதிகைத் தலைவனாலேயே மீட்கப் பெற்றார் என்பதறிக! கொற்றாளின்றித் தவித்த ஏழை, பிட்டு வாணிச்சிக்கு ஆலவாயண்ணல் கொற்றாளாக வந்து ஏவல் செய்த வரலாறு கற்றுத் தரும் பாடம் என்ன? தாயாக வந்து மகப்பேறு பார்த்ததும் தயாபரன் தானே! மாமனாக வந்து வழக்குரைத்த மாட்சிமைமிக்க வரலாறு என்றும் மறத்தற்கியலாதது. இவையெல்லாம் நமது சமுதாய வாழ்க்கை திருக்கோயிலை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! இத்தகைய நடைமுறைகளில் திருக்கோயில்கள் இயங்கியபோதும், நமது சமுதாய மக்கள் வளர்ந்தபோதும் வாழ்க்கை இன்பமாக இருந்தது. திருக்கோயில்களும் உயிர்ப்புடன் அருள் நிலையங்களாக விளங்கின. இன்று, அவை பண்டைய மாட்சியுடன் விளங்கவில்லை என்பது வெளிப்படையான