பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாய்க்கப்போகும் ஆரூரரைப் பற்றி மிக அழகாக-உயர்வாக அறிமுகம் செய்கிறார். மனிதர்கள் தங்களுடைய நண்பர்களை வாய்ப்பேற்படும் பொழுது எவ்வளவு கவனமாகவும், எவ்வளவு உயர்வாகவும் பிறர்க்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டுமென்பதற்கு இந்த அறிமுகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால வென்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யானாள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொண் முலையாய் நீயவனை
மணத்தா லணைவாய் மகிழ்ந்தென்றார்”

(பெ.பு. ஏயர்கோன் - 2839)

என்பார் சேக்கிழார் பெருமான். இதில் வியப்பு என்னவென்றால், சங்கிலியாரிடத்தில் இறைவன், சுந்தரர் பரவையாரைத் திருமணம் செய்திருப்பதைக் கூறவில்லை. நன்னெறியும் நட்பு நெறியும் ஒரோ ஒழி முரண்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் நன்னெறியைவிட நட்பு நெறிக்கே முன்னுரிமை தர வேண்டும். அதனால், நன்னெறியைத் துறத்தல் என்பது பொருளன்று நட்புறவில் உடன்போய் பின் நன்னெறியில் நிறுத்தலே நட்பின் பாங்கு. இக்காரணத்தால் நன்னெறியை முன்னிட்டு நட்புநெறியைப் பாதிக்க விடலாகாது. சுந்தரரை மணக்கச் சங்கிலியார் இசைகின்றார். சங்கிலியார் சுந்தரர் மனையறம் சில ஆண்டுகளேனும் நடைபெற வேண்டுமே என்று கருதித் திருவுளம் கொண்டார். ஆதலால், திருவொற்றியூரிலிருந்து ‘பிரிந்து செல்வதில்லை’ என்று சுந்தரரிடம் உறுதிமொழி கேட்கும்படி சங்கிலியாருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இளமை நலம்