கவியரங்கக் கவிதைகள்
105
தொடக்கக் கவிதை
தண்ணார் தமிழ்மொழி தழைத்து வளர்ந்திடும்
தென்பாண்டி நாட்டில், செந்தமிழ் மொழியையும்
சிவநெறி தன்னையும் சிறப்புடன் பேணும்
நல்லறக் குடியின ராகிய மாண்பார்
நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபில்
காரைக் குடியெனும் கவினார் நகரில்
நூற்று எண்பது ஆண்டுகள் முன்னர்
ஆற்றல்சால் தவத்து ஆண்டவர் முத்து
ராம லிங்க ஞான தேசிகர்
தோன்றி ஞானச் சுடராய் விளங்கினார்!
செல்வம் நிறைந்த செட்டி நாட்டினில்
பூவார் சோலைசூழ் கோவிலூ ரதனில்
ஞானப் பயிர் வளர் நாற்றங் காலாய்
ஆண்டவர் திருமடம் அமைவுறக் கண்டார்!
ஆண்டவர் அரிய சிவபூசை செய்தும்
நாள்தொறும் கோயில் வழிபாடு செய்தும்
ஊனும் உயிரும் உணர்வும் ஒன்றிச்
சீவன் முத்த ரான பெருந்தகை!
அடுத்து வந்தவர் துறவு ஆண்டவர்!
இவரோ,
தேவர்கள் கோட்டையாம் தேவ கோட்டையில்
தோன்றிய ஞானி! துறவின் வேந்தர்!
இப்படி வழிவழி அருளா ளர்பலர்
அமர்ந்தருள் பரப்பிய ஆதீ னம்இது!