பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உட்பகை வளர்த்து வெப்ப உணர்ச்சியால்
நாட்டைக் கலகக் காடா யாக்கிடும்
கட்சிப் போக்குகள் கவலை தருவன!
எதையும் ஏற்(று)இழி நிலையில் வாழ்ந்து
மாண்டிட நினைக்கும் மனத்தைமாற் றாது
பானையை மட்டும் மாற்றினால் போதுமா?
பழக்கம் மாற்றிப் பண்பினை வளர்ப்போம்!
அன்னை மொழியில் அனைத்தையும் கற்போம்!
அன்னைத் தமிழ்க்(கு)அணி கலன்க ளாக
மற்ற மொழிகளை மாண்புறச் சேர்ப்போம்!
தமிழ்மொழி காத்துத் தமிழராய் வாழ்வோம்!
இந்தியராக இயைந்துவாழ்ந் திடுவோம்!
உலகச் சமூகத்து உறுப்பாய்த் திகழ்வோம்!
கெட்ட போரினை முற்றும் தவிர்ப்போம்!
ஆன்ம நேய ஒருமைப் பாட்டினை
ஒழுக்கமாய்க் கொள்வோம்! ஒருகுல மாவோம்!
மாந்தர்எல் லாரையும் மதித்துவாழ்ந் திடுவோம்!
ஒன்றே கடவுள் என்றுகும் பிடுவோம்!
எல்லா ருக்கும் எல்லாம் கிடைத்திடும்
உயர்ந்த பொதுமை யுகம்படைத் திடுவோம்!
பொதுவினி லாடும் புண்ணிய மூர்த்திக்(கு)
இதுவே விருப்புறு பூசனை யாகும்!
பொதுமைச் சமுதாயம் காண்ப தன்வழி
வைய கத்தினில் வானகம் காண்போம்!
புதுப்பா னையிலே பொங்கிடும் சோற்றுப்
பொங்கலைப் படைத்திடும் பொழுதே மண்ணில்
புதுமையைப் பொதுமையை வளர்த்து மன்பதை
உலகினில் மகிழ்ச்சிப் பொங்கல்
நிலவிடச் செய்து நீடுவா ழியவே!