பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


14. வினாக்களின் பயன்

உடம்பினில் உள்ள உறுப்புகள் யாவினும்
வாயினும் மாண்பு பயப்பதொன் றில்லை.
உடம்பினுக் குரிய உணவைத் தேர்ந்தெடுத்(து)
ஊட்டி வளர்ப்பது வாயே யாகும்!
உயிருறு உணர்வுக் குரிய அறிவினை
வினாவுவ தன்வழி விடைபல கேட்டு
அறிவினா லாய ஆக்கம் பெறுதற்(கு)
உறுதுணை யாகி உதவுதல் வாயே!
வாய்க்கு வாய்த்த நற்றொழில் பலபடப்
பேசுவ தன்று சிலபே சுதலே!
பிறர்வாய் பற்பல பேசிடு மாறு
வினாக்கள் எழுப்புக! வினாப்படி களில்தான்
வளர்கிற(து) அறிவியல் வையம் இயங்குகிறது!
முந்தையோர் தொடுத்த வினாக்களின் பயனே
இன்றைய அமைவுறு இனியநல் வாழ்க்கை!
அறிவு தேற அரிய வினாக்கள்
தொடுக்கும் வாயே தொடர்ந்துநீ வாழ்கவே!