பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

293


122. கடவுட் பிரார்த்தனை!

நான் நனிசிறந்த எண்ணங்களுடன்
கடவுளைப் பிரார்த்தனை செய்கின்றேன்
நான் ஒவ்வொரு நாளையும்
எனக்கு உரிமைப்படுத்துவேன்!
ஒரு நாளும் வீணாக அனுமதியேன்!
முன்னோக்கியே பார்ப்பேன்!
பின்னால் பார்க்கவே மாட்டேன்!
இறைவனே! எனக்கு அமைதியைக் கொடு!
என்னை விவாதங்களிலிருந்து விடுதலை செய்!
தீமையே செய்யினும்,
மனக் கசப்பிலிருந்தும்
பகைக்குப் பகை எனும் உணர்விலிருந்தும்
பழிக்குப் பழி வாங்கும் உணர்விலிருந்தும்
என்னை மீட்டெடுப்பாய் இறைவனே!
மக்கள் அனைவருக்கும் நட்பாளனாய்
நயந்து வாழ்ந்திட அருள் செய்க!
என்னைப் பகைப் போரிடமும்
அன்பு செய்யும் இதயம் தருக!
நான் என்னுடைய தவறுகளைச்
சடுதியில் உணரும் திறமருள்வாய்!
கண்ட அப்பொழுதே திருத்தங் காணும்
பெற்றிமையை அருள் செய்க!
பாரில் சிறந்த பரந்த மனப்பான்மையையும்
பாரினில் எவருக்கும் அன்புகாட்டும் தன்மையையும்
உதவிகள் செய்திடும் உத்தம வாழ்வினையும்
அருள் செய்க!
தீமையை வெறுக்கவும்!
நாளும் நன்மையைக் கடைப்பிடித்தொழுகவும்.
மனிதனாக வாழும் வலிமையை
அருள் செய்க!