பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்றுக் கொள்ளுங்கள். புலால் உண்பதைத் தவிர்ப்பதைக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். நம்முடைய வாழ்க்கையில் அன்பு சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்; நாம் மற்றவர்களிடம் அன்பு காட்டுவதோடு, மற்றவர்களும் நம்மிடம் அன்பு காட்டுகிற அளவுக்கு நாமும் எளிமையாக இருக்க வேண்டும். மனித உயிரிடம் மட்டுமின்றி, மற்ற உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் செயல்பாடுகள் கண்டிப்பாக மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். நம்முடைய அன்பையும், அறிவையும் நாம் ஆற்றலாக உருவாக்க வேண்டும். கடவுளை நம்புகிற பொழுது முழுமையாக நம்ப வேண்டும். கடவுள் நம் பிரச்சனைகளுக்குத் துணை நிற்பார் என்று நாம் உறுதியாக நம்பினால் கடவுள் கண்டிப்பாகத் துணை நிற்பார். வாழ்க்கையில் கவலை என்பது எந்த இடத்திலும், எந்தக் கோணத்திலும் இருக்கக் கூடாது. “நாளை நமக்கு உரியது” என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் அன்பு மிளிரட்டும். அதன் மூலம் நீங்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வையுங்கள். வாழுங்கள் என்று கூறி வாழ்த்தி விடைபெறுகிறேன்.