பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குழந்தைகளின் மனம் சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றல் மிக்கதோர் இயந்திரம் போல. அது, எதையும் படம் பிடித்துக் கொள்ள சக்தி வாய்ந்த ஒரு காமிரா. எனவே, குழந்தை களிடத்தில் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பழக வேண்டும். அவர்களுக்கு நல்ல காட்சிகளையும் நல்ல சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

* * *

மக்களுக்கு மணமும் தேனும் தந்துதவுகிற மலர்களை இறைவன் விரும்புவது போல, மக்களுக்கு அன்போடும் பண்போடும் உதவி செய்கின்றவர்களையும் இறைவன் விரும்புவான்.

* * *

பக்தியும் தொண்டும் ஒரு நாணயத்தின் இருபுறங்களைப் போல, கண்களை மூடிக்கொண்டு பஜனை செய்கின்ற அளவிலேயே நிற்பது பக்தி-மனிதன் அசைய ஆரம்பித்ததும் தொண்டு மலர்கிறது. பானைக்குள் இருக்கும் தண்ணிரைத் தூய்மையாக வைத்துக் காப்பது பக்தி, அதனை அள்ளிக் குடிக்கும்படி செய்வது தொண்டு.

* * *

கட்டுச்சோறு மறுநாள் பயணத்திற்குப் பயன்படுவது போல, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் கல்வி அவர்களின் எதிர்காலத்திற்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

* * *

பெய்கின்ற தண்ணிரைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொள்ளாத செடிகொடிகள் செழித்து வளராதது போலக் கற்கின்ற கல்வியை-அந்தக் கல்வியின் மூலம் கிடைக்கக்கூடிய சிந்தனையை உணவாக ஏற்றுக் கொள்ளாத குழந்தைகள் சிறந்து வாழமுடியாது.