பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போது, அவர்கள் உழைத்து முன்னேறினார்கள்" என்று லாங்பெலோ கூறினார். நமது ஒளவையாரும்,

“மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”

என்றார். குறிக்கோளிலேயே கவனம் செலுத்துபவர்கள் உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் பார்க்க மாட்டார்கள். எவர் தீமை செய்தாலும் அத்தீமையைக் கண்டு அஞ்சிப் பணியிலிருந்து - உழைப்பிலிருந்து விலகார். காரியம் முடியும் வரை தூங்க மாட்டார்கள். பசியைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நோக்கியே பயணம் செய்வார்கள்.

உழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அறிவுழைப்பு. மற்றொன்று உடலுழைப்பு. இவ்விரண்டு உழைப்புக்களிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது. ஆனால் காலப்போக்கில் உடல் உழைப்பை இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருப்பதை இன்றைய சமூக அமைப்பு உணர்த்துகிறது.

அறிவுழைப்பாளிகள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். இது நெறிமுறையன்று. அறிவுழைப்பும் உடலுழைப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு வளரும். இன்று உடலுழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதால் அரசுப் பணிமனைகளில் ஏவலர்களாகக் கூடப் பணி செய்ய முன் வருகின்றனர். ஆனால் தோட்டப் பண்ணை அமைக்க முன் வருவதில்லை.

வாழ்வையும் வேலையையும் மதிக்காமல் வெறுக்கிறார்கள். இவர்களுக்கு உறுதிப்பாடு இல்லை. அனுபவித்த வரை இன்பம் என்ற (ஹீடனிஸ்டிக்) அபிப்பிராயத்தில் நடலையாக வாழ்கின்றனர். இது மிகவும் ஆபத்தான தீமை.