பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/474

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


மடாலயத் தலைவர்களுள் சமரச-சமதர்ம-நோக்கும் போக்கும் சிறந்த செம்மல் தவத்திரு குன்றக்குடி அடிகளாரே. இக்காரணத்தாலேயே இன்றைய தமிழக அரசு அவரைத் தமிழ் நாடு மேலவை உறுப்பினராயும் மேவியுள்ளது. இதனால் அடிகளாரும் பெருமை பெற்றுள்ளார்; அரசும் பெருமை பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ் பற்றியும் சமயம் பற்றியும் சாற்றிய புதிய சிந்தனைகள் பலவற்றின் கட்டுரைத் தொகுப்பே இந்நூல். செந்தமிழிலேயே பேசவும் பேசும் போக்கிலேயே எழுதவும் எழுதும் போக்கிலேயே பேசவும் வல்லவர் அடிகளார். அவர் சமுதாயத்தின் அடிமுடி கண்ட அண்ணல். எனவே அவர் எழுத்திலும் பேச்சிலும் அன்றாட வாழ்வின் அடிப்படைகள் ஆராயப்படுதல் இயற்கை. இவ் வுண்மைக்கு இந்நூலும் தக்க சான்று.

கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் தொண்டுள்ளமும் சமயத் தோய்வும் பகுத்தறிவும் பண்பாடும் நிறைந்த அடிகளார் கட்டுரைகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஆழ்ந்து கற்றுப் பயன்பெற-பயன்தரத்தக்கன. இந்நூலுள் அடிகளாரின் மொழி நாட்டுப் பற்றுகளையும், அறிவருளாற்றல்களையும் காட்ட வல்லனவாய் என் உள்ளங் கவர்ந்த சில பகுதிகளையேனும் ஈண்டு எடுத்துக்காட்டுக்களாய்த் தொகுத்துத் தரச் சுவையும் பயனும் தருவதாகும்.

இவ்வாறு தொட்ட இடமெல்லாம் புதிய சிந்தனைகள் புகட்டும் இந்நூலை-ஒவ்வொரு-ஏன்-தமிழகத்தின் ஒவ்வொரு தனியகத்திலும் இருக்கத்தக்க இந்நூலை வெளியிட்டுள்ள கலைவாணி பதிப்பகத்தார்க்கு என் உளங்கனிந்த பாராட்டு.

ந. சஞ்சீவி

சென்னை
2-3–72