பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/501

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

489



நண்பர் சீனி. திருநாவுக்கரசு தமிழ் நலமும், தமிழின நலமும் எண்ணி, நூற்பதிப்புப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர். கருத்து வளமும், சிந்தனைத் தெளிவும் கொண்ட தலைப்புகளையே வெளியிட்டு வரும் கொள்கையாளர். அந்த வரிசையில் இவ்வரிய நூலும் இடம் பெறுகிறது. அவரது உயர்ந்த பணியையும் உறுதி சேர்ந்த முயற்சியையும் தமிழக மக்கள் பாராட்டி, ஊக்குவிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். ஊக்குவிப்பார்கள் என்பது என் நம்பிக்கை, கலைவாணி புத்தகாலயத்தின் தமிழ்ப்பணி வாழ்க! வளர்க!

டாக்டர். வா.செ. குழந்தைசாமி

துணைவேந்தர்

அண்ணா பல்கலைக் கழகம்.

சென்னை-600 025
18-4-1983


12. தமிழும் சமயமும் சமுதாயமும்
1983 நவம்பர்

வாழ்த்துரை.


நம் அமுதத் தமிழ் மொழி வழி தோன்றியதே சைவ நன்னெறியாகும். அருந்தமிழையும், அற்புதச் சைவ நன்னெறி யினையும் வேறுபிரித்தல் இயலாது. உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலெழுத்துக்கள் முப்பத்தாறு தத்துவங்களின் வெளிப்பாடேயாகும்.

அந்தத் தத்துவங்களை உணர்த்தும் சைவ நன்னெறி பற்றி ஒழுகுதல் தனி மனித மேம்பாட்டுக்கு மட்டும் உரிய தன்று, சைவ நன்னெறி ஒழுக்கம் சமுதாய மேம்பாட்டுக்கும் ஆகும்.

பொருளியல் அருளியல் இரண்டையும் சமுதாயம் நிறைவுறப் பெற்றுச் சமத்துவ ஒருமையுடன் உலகியல் நடத்தி உய்யச் செய்விக்கும் நன்னெறி ஒழுக்கமே சைவம் ஆகும்.