பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றான். மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் 'உலகத்தோடொட்ட ஒழுகல்' மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வலியுறுத்திக் கூறுகின்றார்.

இன்றையச் சூழ்நிலையில் நமது பாரதநாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்திதாள்களைப் புரட்டினால் கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது, இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும், அரசியல் காரணமாக ஏற்படும் குழுக்களின் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப் பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப் பாட்டை, தாய்மொழியுணர்ச்சிக்குப் பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப் பெறும் நாட்டில், ஒரு மொழியின் மூலம் ஒருமைப் பாட்டை உண்டாக்க முடியாது. அதுபோலவே ஆட்சி முறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விட முடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின்பாற் பட்டது. அஃதொரு கலை; ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒருமைப்பாட்டைச் சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழிவகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ 'ஒரு நாட்டு மக்களை ஒத்த உரிமை யுணர்வுடன் இணைக்க, ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்கவேண்டும்' என்று கார்லைல் கூறினான்.