பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

223


தன்னுயிரைக் காதலிப்பர். தன் உயிர் நலன் கருதிப் பிற உயிர்களுக்குக் கேடு சூழ்வர். அந்தோ, அறியாமை!

உயிர் வாழ்க்கை இயல்பிலேயே தனித்ததல்ல. அஃதொரு கூட்டு வாழ்க்கை கூட்டு வாழ்க்கையில் துன்பம் ஒருவருக்கு மட்டும் வருமாறென்ன? உயிர் வானின்றிழியும் நீர்த் துளியைப் போல்வது. நீரும் வளியும் சார்ந்த சார்பின் காரணமாக வண்ணமும், சுவையும், மணமும் பெறுதல் இயற்கை அதுபோல, உயிரும் சார்பின் வழி, இயல்புகளைப் பெறும்.

உயிர் யாதொன்றையும் சாராமல் இருக்க முடியாது. ஆதலால், உயிர் தனது சார்பிற்குரியனவாகிய பிற உயிர்களையும் அருள்நலம் செறிந்தவையாகத் தான் காணுந் தொறும் துய்க்குந்தொறும் துய்ப்பதற்கேற்றவாறு அருள்நலச் செறிவுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வீட்டினுள் வெப்பம் தாக்காதிருக்க வீட்டிற்கு வெளியில் ஒரு தாழ்வாரம் தேவை. அப்போது வெளியில் உலவும் வெப்பக் காற்று தாழ்வாரத் தண்ணிழலில் குளிர்ந்து வீட்டிற்குள் இருப்பவரைத் தண்ணென்ற தன்மையினால் வாழ்விக்கும். அதுபோல உயிருக்குத் தம்மொடு தொடர் புடைய பிறவுயிர்களின் அருளார்ந்த சூழலே வாழ்விக்கும்.

தெருக்கோடியிலுள்ள வீடு தீப்பற்றி எரிந்தால், அந் நெருப்பினை மற்ற வீடுகளுக்குப் பரவாமல் அணைப்பதே எல்லாருக்கும் பாதுகாப்பு. அங்ஙனம் செய்யாமல் எவனாவது ஒருவன் தன் வீட்டின்மீது மட்டும் தண்ணீர் அள்ளி ஊற்றுவானானால் யாது பயன்? ஊற்றிய முயற்சியும் பாழாகி, அவனும் அவன் வீடும் அழிவது திண்ணம்.

ஆதலால், எவன் ஒருவன் தன்னுயிர்க்குத் துன்பம் வரக்கூடாதென்று கருதித் தன்னுயிரைக் காதலிக்கின்றானோ, அவன் செய்ய வேண்டியது தன்னுயிர்க்காதலல்ல; மன்னுயிர்க் காதலேயாம்.