பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருப்பித் தரமுடியாதோ, அதுபோல நரகமும் அவனைத் திருப்பிவிடாது என்பதனை,

உண்ணாமை உள்ளது உயிர்நில்ல ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

என்பர் திருவள்ளுவர். அதாவது மீளா நரகத்தில் ஆள்வர். அதனாலன்றோ இளங்கோவடிகளும் "ஊனுண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்" என்றார். சிலர், தாம் கொல்லமாட்டார்கள்; கடையில் விற்கும் புலாலை வாங்கி உண்பர். இவர்கள் கருத்து கொன்றவனுக்கே பாவம். தமக்கு இல்லை என்பதாகும். பாபம், காரியம் காரணம் இரண்டையும் பற்றிப் படரும். கொலை செய்பவன் ஏன் செய்கிறான்? புலால் உண்பவரின் விருப்பத்தை அறிந்தே கொல்லுகிறான். புலால் உண்பவர் இல்லையானால், கொல்பவரும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், புலால் உண்பவர்களே புலாலுண்ணும் குற்றத்தைச் செய்வதோடன்றிப் பிறரைத் தம்முடைய புலால் இச்சையின்மூலம் கொலைக்குற்றம் செய்யத்துரண்டுகின்றனர். கொலை செய்பவரைவிடக் கொலைக்குத் தூண்டுபவரே கொடியர் என்று திருக்குறள் வன்மையாக எடுத்துக் கூறுகிறது.

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்

என்பது திருக்குறள்.

இறைவனை நினைந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒன்றன் உயிரைச் செகுத்து உண்ணாமை மேலாய அறம் என்று வள்ளுவம் போதிக்கிறது.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

என்பது திருக்குறள்.