பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

315



வேளாண்மை

உலகில் இன்னமும் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள். வறுமையில் வாடி ஏக்கமுற்று வாழ்ந்தும் வாழாதவராக இருப்பவர்களைப் பார்த்து, நிலமகளாகிய அன்னை எள்ளி நகைக்கின்றாள். உண்டு உடுத்து மகிழும் பொருட்செல்வத்துக்கு நிலமே அடிப்படை.

இந்த நிலம் தன்னை அணுகிக் கைவினையால் முயன்று நிற்போரை ஒன்றுக்குப் பத்தாக அள்ளிக் கொடுத்து வாழ்விக்கும் இயல்புடையது. ஆயினும் பலர் கைவினை கொண்டு நிலத்தையணுகிப் பெறுவன பெறாமல் கைகளை விரித்து ஏங்கி, தராதார்மாட்டு நின்று இரந்து கேட்டு இழிநிலை எய்துகின்றனர். இது கொல்லைப்புறத்தில் கோபுரமனைய செல்வமிருக்கக் கண்டும் காணாமல் கொல்லும் வறுமையில் வாடுவது ஒத்தது. இதனை,

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

என்று ஒதுகிறார், திருவள்ளுவர்.

உலகில் பல்வேறு தொழில்கள் உண்டு. ஆயினும் உழவுத் தொழிலே தலையாய தொழில். மற்றத் தொழில்கள் வழி கிடைப்பன இல்லாமலும் வாழமுடியும். ஆனால், உணவின்றி வாழமுடியாது. "உண்டி முதற்றே உலகு" என்றும் கூறுகிறார்கள். ஆதலால்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை

என்றார் திருவள்ளுவர். மேலும் பல்வேறு தொழிலுடையாரையும், மற்றும் எல்லாரையும் தாங்கி நிற்கும் பெருங்குடி, உழவர் பெருங்குடியேயாகும்.