பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

317



உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற குறள் ஒதுகிறது. இளங்கோவடிகளும் "வீழ்குடி உழவர்" என்று உழவர் பெருங்குடியை உயர்த்தினார்.

நாட்டை ஆளும் அரசின் குடை தாழாது, பேரரசுகளையும் தன்னுள் அடக்கிக் காட்டும் ஆற்றல் உழவுத் தொழிலுக்கே உண்டு. கழனிகளில் கிடக்கும் கதிர்களின் நிழலே, அரசுக் குடையின் நிழலுக்கு அரண் செய்கிறது. கதிர்கள் நிழலே கொற்றவன் குடைக்கும் ஆண்மையும், தண்ணளியும், கொடையும் வழங்குகின்ற பெருமையுடைய தாகும். அதனாலன்றோ, புறநானூறு.

பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

என்று கூறிற்று!

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்

என்றார் இளங்கோவடிகளும்.

இன்று நம்முடைய நாட்டைப் பற்றி வருத்தும் துன்பமும், உணவுப் பற்றாக்குறையேயாகும். இந்த உணவுப் பற்றாக்குறை காரணமாக நம்முடைய மக்கள் அல்லற்படுகின்றனர். வெளிநாட்டில் உணவுப் பொருளை வாங்குவதன் மூலம், நமது அந்நியச் செலாவணி முடைப்படுகிறது. ஆதலால், இன்று நம்முடைய தாய் நாட்டுக்குச் செய்யும் உயர்ந்த பணி, உணவு உற்பத்தியைப் பெருக்குதலேயாகும். இன்று நமது தாய்நாட்டின் வலிமை, உணவு உற்பத்தியிலேயே இருக்கிறது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.