பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

321



ஆயினும், அவளையுடையவன் நாள்தோறும் அவளை அணுகிக் கண்களால் நோக்கிப் பழகித் தன்னுடைய கைகளால் அவளை ஒப்பனை செய்யத் தவறின் அவளுக்கும் பொல்லாத கோபம் வந்துவிடும். அவள் அகத்தே ஊடி விடுவாள்; அதாவது மாறுபாடு கொள்வாள்.

காதலனுக்கெனக் காத்திருக்கும் காதலியை ஏவலாள் போய் நிறைவு செய்ய முடியுமா? ஏவலாளனைக் கண்ட காதலியிடத்தில்தான் எழில் நகை அரும்புமா? அல்லது ஏவலாளன் மூலம்தான் நன்கலம் பெற முடியுமா? அதுபோன்றதே நில உரிமையாளனுக்கும், நிலத்திற்குமுள்ள உறவு என்கிறார் திருவள்ளுவர்.

இதனால் நிலம், உழுவோனிடத்திலேயே இருக்க வேண்டும். உழுவோனுக்குரிய நில உரிமையே நியாயமானது; இன்பமானது; வளம்பல படைத்துத் தருவது என்று வள்ளுவம் கூறுகிறது.

இன்றோ, நமது நாட்டில் நில உரிமைக்கும் உழவுக்கும் பல இடங்களில் உறவில்லை. 'மெரினா' கடற் கரையில் உலாவி மகிழ்வோர் தஞ்சைத் தரணியில் நிலம் பெற்றிருக்கின்றனர்.

நிலம் என்னும் நல்லாள் எப்படி வளர்வாள்? அவளைப் பார்ப்பார் யார்? அவள் வயிற்றுப் பசிக்கு உரமிடுவார் யார்? அவள் திருமேனியைத் தண்ணீரில் நனைத்துக் குளிப்பாட்டுவார் யார்? களையாகிய நோய் கண்டபோது களைவது யார்? இத்தனை அவலங்களுக்கிடையேயும் நிலமென்னும் நல்லான் செந்நெல் கொழிக்க வேண்டும்; செங்கரும்பு தரவேண்டும் என்று கேட்டால் தருவாளா?

ஏதும் செய்யாது இன்பத்திற்கு மட்டும் காதலியிடத்தில் உரிமை கொண்டாடக் காதலனுக்கு ஏது உரிமை? நிலமென்னும் நல்லாளை நாடாமல், அவளை உழுது