பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

337



ஒருவன் பல்லாற்றாலும் முயன்று நல்லூழ் இன்மையின் காரணத்தால் தோற்றுவிட்டால் இரந்து இழந்த வாழ்க்கையை எடுக்க எண்ணுகிறான். கரவாது உவந்து வழங்குபவன் என்று கருதிச் சென்று இரக்கின்றான். இரத்தற்குரிய சொல்பிறந்தபோதே பழகிய மானத்தில் தங்கியிருந்த உயிர்நிலை பிரிகிறது.

யார் எதிரில் நின்று இரந்தானோ, அவன் நிலைமையறிந்து கொடுக்கவில்லை. இரத்தற்சொல் வெளிப்பட்டது. இரத்தற்சொல் வெளிப்பட்டவுடன் இழிவந்த உயிர் பிரிந்தது.

எதிரில் நின்றவனோ கரக்கின்றான்; தன் பொருளையும் கரக்கின்றான்; தன்னையும் கரக்கின்றான். இரப்பவரிடத்தில் ஒளித்துக் கொள்ளலாம். கரப்பவர் தங்கட் கெல்லாம் கடு நரகங்கள் வைத்திருக்கின்றானே பெருமான், அவன் முன்னேயும் இவன் ஒளிய முடியுமா? முடியாது. இதனை,

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஓம் உயிர்

என்று குறள் கூறுகிறது.

மலையை எடுத்து ரோமத்தால் கட்டலாம், கடுகில் ஏழுகடலை அடைத்தலும் கூடும். ஆனால் வறுமையை இரந்து மாற்றுவது என்றும் முடியாது. எப்பொழுதும் முடியாது. வறுமை தீர்தலுக்குரிய ஒரே வழி நன்முயற்சியுடன்கூடிய உழைப்பேயாகும்.

ஆதலால் மிகச் சிறந்த அறமாகிய பசுவினைப் பேணுதலுக்குக்கூடத் தண்ணிரை இரந்து கேட்கக் கூடாது. பசுவினைப் பாதுகாப்பது பேரறம், அதுவும் உயிர்போகும் தருணத்தில் கிடக்கும் பசுவுக்குத் தண்ணீர் வழங்குதல் தலையாய கடமை, அறமும்கூட

திII.22.