பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

341


நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

என்பது குறள்.

தேவர்கள் பதவியால் உயர்ந்தவர்கள். ஆயினும், அவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகள் எண்ணிலடங்காதவை. அவர்கள் உயர்ந்தோர் என்று கருதித் தாம் விரும்பியபடியெல்லாம் செயல்படுகின்றனர். இதன் விளைவே தக்கன் வரலாறு, தேவர்களின் தலைமைப் பதவியாகிய இந்திரப் பதவிக்கு அடிக்கடி சண்டை நடந்தவற்றைப் புராணங்கள் பேசுகின்றன. தேவர்களையும் கயவர்களையும் திருவள்ளுவர் ஒரு தன்மையர் என்றே பேசுகின்றார். ஒரே ஒரு வேற்றுமை. தேவர்கள் பதவியிலமர்ந்து செய்கிறார்கள். கயவர்கள் பதவியில் இல்லாமற் செய்கிறார்கள். கயவர்கள் தாம் விரும்பியவற்றையே செய்வார்கள். மற்றவர்கள் நிலை கண்டு யார் ஒருவருக்கும் துன்பம் தராது ஒழுகும் இயல்பு கயவருக்கு இல்லை. ஏன்? பழகியவர்களுக்கும் நீங்காத் துன்பம் கொடுப்பர்.

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

என்பது குறள்.

கயவர் தம்மையொத்த கயவர்களைக் காணின் மகிழ்ந்து கூடி உலாவுவர்; சமுதாயக் கேடுகளைச் செய்யத் துணை கிடைத்ததே என்று துள்ளி மிகிழ்வர். அது மட்டுமா? கயமைத்தனத்தில் போட்டி போடுவர். அதிகக் கீழ்த்தனமான காரியங்களைச் செய்து நானே வெற்றி பெற்றேனென்று செம்மாப்பர்.