மனம் ஒரு மாளிகை
37
உலகம், தொழில் வயப்பட்டது. இயற்கை உலகம் ஓயாது தொழிற்படுகிறது. தொழிற்பாட்டில்தான் ஐம்பூதங்கள் இயங்குகின்றன. வளி சுற்றுகிறது. வான் மழை பொழிகிறது; நலம் வளம் கொழிக்கிறது! உலகிற்கு உழைக்கும் உயிரின்றி இயக்கம் இல்லை. உயிரினங்களில் மூத்தவனாகிய மனிதன் மற்ற உயிரினங்களைவிட அதிகமாகவே உழைக்கக் கடமைப் பட்டிருக்கின்றான். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.
நாளைய உணவுக்குச் சேர்த்து வைக்கும் குணத்தி லிருந்து சொத்துடைமை உணர்வு பெருகி உடைமைவர்க்கம் ஏற்பட்டமையின் காரணமாக, உடைமையற்றோர் உழைத் தலும் உடைமையுடையோர் உடைமையற்றோர் உழைப்பி லிருந்து வாழ்தலுமாகிய சூழ்நிலை சமுதாய அமைப்பில் தோன்றிவிட்டது. அதற்குப் பிறகு உழைப்பது உயிரின் இயல்பு என்ற கொள்கை மாறி உழைக்காமலே உண்பது பெருமைக் குரியது என்ற கொள்கை தோன்றிற்று. உடன் உடைமை வர்க்கத்தோடு இயல்பாகத் தழுவிக் கொள்ளும் இயல்புடைய-பிழைப்பு வழிப்பட்ட மதப் புரோகிதர்கள், உழைக்காமல் உண்பது புண்ணியத்தின் பயன் என்றும், உழைப்பது பாபத்தின் பயன் என்றும் உடைமை வர்க்கத் திற்குச் சாதகமாகப் பிரசாரம் செய்தனர்.
அது மட்டுமா? உழைப்பின் பயனை உழைப்பவன் அடைய முடியாதபொழுது அல்லது அடைவதற்குத் தடை யாக உடைமை வர்க்கம் நின்றபொழுது இதே புரோகித வர்க்கம் "அவ்வளவுதான் கொடுத்து வைத்தது; தெய்வம் அனுமதித்த கூலி கிடைத்திருக்கிறது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்து உபதேசித்து செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆகவும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகவும் செய்தனர். ஆனால், உண்மையான சமயம் இதை ஏற்றுக் கொள்வதில்லை.