பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உண்மையான மெய்ந்நெறி காட்டிய திருவள்ளுவர் ஆள்வினையை உயிரின் இயல்பான உடைமை என்கிறார். ஆள்வினையுடையாருக்கு அருமையுடையதில்லை. தெய்வம் என்பது மனிதர்களை அவரவர் வினைவழி, வழி நடத்துதல் என்பதேயாகும். ஆனால், மனிதனின் வாழ்க்கையில் தெய்வத்திற்கு எதேச்சாதிகாரமான ஆளுமை இல்லை. அஃதொரு நியதி. நேற்றைய தீவினையை இன்று அறிந்து நினைந்து வருந்தி மாற்றிக் கொண்டு நல்வினை செய்யப் பெறுமானால் தீவினையை வெற்றி காணலாம்.

அதற்குத் தேவை முயற்சியே! நேற்றைய தவற்றை இன்றைய முயற்சியால் திருத்திக் கொள்ளத்தானே வாழ்க்கை! மண் திருத்தப்பெற்று சோலைகளாவதைக் காண்கின்றோம். மனம் திருந்தினால் மாண்புகள் சேராவோ? உடலின் பளபளப்பைவிட உழைப்பின் வடுக்கள் தேவதைகள் கண்டு மகிழும் காணிக்கைகளாகும்.

உழைப்புக்குணம் என்பது நல்ல-வளர்ந்தஆரோக்கியமான ஓர் உயிரின் குணம்ாகும். அதனாலன்றோ பாரதி, "கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்றான். பொதுமையுலகு கண்ட மாமுனிவர் மார்க்ஸ் "உழைக்காத வனுக்கு உண்ணும் உரிமையில்லை" என்று கூறினார். உழைப்பு என்ற அச்சிலேயே உலகம் இயங்குகிறது.

மனிதன் அறிந்து அனுபவிக்கும் அனைத்துப் பொருள்களும் மனித உலகத்தைச் சார்ந்த உழைப்பு வர்க்கத்தின் உழைப்பின் பெருமையைப் பண்பாடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை வளர, இன்பமுற வாழ அறிவறிந்த ஆள்வினை தேவை. இதுவே வள்ளுவர் ஆணை.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா(து) உஞற்று பவர்.