பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்த யுகத்தில் அறமும் கூட வணிகமாகியுள்ள கொடுமையைப் பார்க்கிறோம். அறப்பணிகளாகக் கருதப் பெறும் கல்விப்பணி, திருக்கோயிற்பணி ஆகியவை இன்றைக்கு வணிக வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. இவை இரண்டும் வணிக வடிவத்தைப் பெற்ற பிறகு சமுதாயத்தின் அடித்தளமே புரண்டுவிட்டது. இதனால் அந்நிலையங்களுக்கு வருவாய் வரலாம். வணிகத்தின் நோக்கம் இலாபம் தானே! ஆனால் கல்வியின் பயனாகிய அறிவும் அருளியலின் பயனாகிய ஒப்புரவும் உயர் வீடும் கிடைக்காது. நோக்கம் எதுவோ அதுவே கிடைக்கும்.

ஆதலால் செயலைச் செயலுக்காகவே சிந்தனை செய்து செய்வது சிறந்தமுறை. கல்வி கற்பது அறிவின் ஆக்கத்திற்காகவே என்ற நோக்கம் அமைதல் வேண்டும். அங்ங்ணமின்றித் தொழில் பெறும் நோக்கத்தோடு கற்கும் பொழுது அறிவு கிடைப்பதில்லை. ஆனால் தொழில் கிடைக்கும். நட்புப் பாராட்டுவது நட்பிற்கே அதற்கு நோக்கம் என்றால் நட்பு பயிலுதலே நோக்கம்.

அதற்கு மாறாக நலன்கள் சேர்ப்பதை நாட்டமாகக் கொண்ட நட்பினால் அது தோற்றத்தால் உள்ள நட்பே, அது தொடர்ந்து வளர்வதில்லை; இடையறவுபடும். அது மட்டுமன்று, அத்தகையோர் பிரியின் பெரும்பகை கொள்வர். நன்னோக்கமாகக் கொண்ட நட்பே நன்மை தரும். அதனாலன்றோ, உயிர்களை இறைவன் காதலிக்கிறான்; அவற்றுக்குக் கருணை பொழிகின்றான். ஏன்? உயிர்களை ஆட்கொண்டருளுவதுதான் அவனது நோக்கம். கருணையின் பயன் கடவுளுக்கல்ல உயிர்களுக்கேயாகும்.

உயிர்களை ஆட்கொண்டருளுவதில் கடவுளுக்குத் தற்சார்பானது எதுவும் இல்லை. குறையொன்றும் இல்லாத கூத்து என்று மணிமொழி பேசும், சுந்தரர் பித்தன்' என்பார். அதுபோல் கடவுளைப் பூசனை செய்வோரும், கலந்த