பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

79


உயிரைப் பொருளுடையதாகப் புகழுடையதாக ஆக்கும் ஒழுக்கம் உயிரினும் சிறந்தது.

உயிரின் இன்பநெறித் துய்ப்பிற்கும் பெருமைக்கும். ஒழுக்கம் காரணமாக ஆதலால், "உயிரினும் ஒம்பப்படும்” என்றார். ஒம்புதல் என்ற சொல், தொடர்ச்சியாகப் பேணுதல்-பாதுகாத்தல் என்ற பொருள் தரும். ஒழுக்க நெறி நிற்பார்க்கு இழுக்கல் வருவது இயற்கை.

இழுக்கல் வந்துழியும் ஒழுக்கத்தில் தாழாது, இடையறாது இடர்களையும் தாங்கிக்கொண்டு ஒழுக்கத்தைப் பேணுதல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்ற "ஓம்பப்படும்" என்றார். வாழ்க்கை யென்ற மாளிகைக்கு உண்மையான ஒளியூட்டுவது ஒழுக்கமேயாம்.

பத்திமை-அருள்

வாய்மை நெறியை முயன்று அடைதல் அரிது. பெற்ற வாய்மையைப் பேணிப் பாதுகாக்கத் துணை செய்வது பக்தி, பத்திமை என்பது முழு நிறை ஞானத்தில் தோன்றும் உணர்வு உயிரினை இன்ப அன்பில் வளர்க்கும் உணவு. பக்தி, நிறைவில் விளையும் ஆக்கம். பத்திமையால் பழவினைகள் மாறும்.

நேற்றைய துன்பங்கள் துடைத்து எறியப்படும். துன்பத்திற்குரிய காரணங்களும் அகற்றப்படும். நிகழ்கின்ற வினை அனைத்தும் தூய தவமாக அமைந்திருக்கும். ஆதலால் எதிர்வினை இல்லை. இந்நிலையிலேயே "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற முழக்கம் கேட்கிறது. துன்பத்திற்குக் காரணமாய மாசுகளினின்றும் அதாவது அவாக்களினின்றும் அறவே விலகிய புலன்களே பத்திமையில் தோய்ந்த புலன்கள்.