பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தக் குறைகள் நீங்க மனிதனைச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அவனுடைய அறிவுப் புலனை இயக்குதல் வேண்டும். மனத்தின் இயக்கத்தை வெளிப்படுத்துவது உணர்வே. உணர்வின் மையம் கருத்துக்களே! கருத்துக்களைப் பெறும் வாயில் கற்றலும் கேட்டலுமாம். கற்ற-கேட்ட நற்செய்திகளின் வழி வாழ்க்கையை இயக்கும்பொழுது அறிவு தோன்றுகிறது. அறிவு மற்றவர்களோடு பழகும்பொழுது ஒழுக்கமாக உருப்பெறுகிறது.

இத்தகைய மானிட சாதியின் ஒழுக்கம் சிறப்புற அமைய வேண்டும். மனித குலத்தில் பொது ஒழுக்கம் சிறக்குமாயின் ஒருலகம் தானே தோன்றும். இன்று "ஒருலகம்” என்பது வாய்ப்பேச்சே! "யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பது மேடையோடு சரி! "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!” இந்த முழக்கம் பஜனை மடங்களிலேயே கேட்கிறது. ஆனால், பஜனை முடிவில் மரியாதை யாருக்கு? என்ற சண்டை நீங்கினபாடில்லை. சுண்டல் விநியோகச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. அன்பிற் பிறந்த மதங்கள் ஆதிக்க உணர்வுடையவர்களின் கையில் சிக்கி மதச்சண்டைகள் மலிந்து வருகின்றன.

பாபத்தை நீக்க-புண்ணியத்தை வழங்கத் தோன்றிய பிரார்த்தனைக் கூடங்கள் பணம் பேரம் பேசும் வணிக நிலையங்களாக உருமாறிவிட்டன. இவ்வளவுக்கும் காரணம் மனிதமனம் தடம்புரண்டதுதான்! தடம் மாறியதற்குக் காரணம் தகுதியல்லாத போதனைகள்; எல்லைவயப்பட்ட சிறுமைச் சிந்தனைகள்! மனித உலகம் மேம்பாடடைய மனம் திருந்த வேண்டும். மனம் திருந்த மருந்து நற்கருத்தேயாம். நச்சுத் தன்மையான கருத்துக்கள் எழுத்தில், பேச்சில் அகற்றப்பெற வேண்டும். உயர்ந்த கருத்துகள் ஊட்டப் பெறுதல் வேண்டும்.