பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
தமிழண்ணல்
துணைத் தலைவர், தமிழிலக்கியச் சங்கப் பலகைக் குறள்பீடம் ஒருங்கிணைப்பாளர். தமிழ்ச் சான்றோர் பேரவை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் அவர் மக்கள் மன்பதைக்குப் பாடுபட்டு, நெறிகாட்டிய பெருமைக்குரியவர் என்பதால் அவரைச் சமுதாய மாமுனிவர் என்றனர். தமிழ்மொழி வளம்பெற நாடனைத்தும் சென்று, தம் சிந்தனைச் செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதால் தமிழ் மாமுனிவர் எனவும் போற்றினர்.

பிற மடங்களும் தமிழும் சிவனியமும் வளரப் பாடுபட்டன. எனினும் ‘ஆசார அனுட்டான’த் தடைகளால், மக்கள் அணுக முடியாத, உயர்ந்த பீடங்களில் இருந்தனர். அவற்றைவிடக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் பெரியதன்று. ஆயினும் அப்பரடிகளைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, மக்கள் மன்றத்திற்கு வந்து அவர்களிடையே தாமும் ஒரு ‘மா மனிதராக’ விளங்கியதால், தாம் தலைமை தாங்கிய திருமடத்தின் புகழை உலகறிய உயர்த்தியவர்தான், தவத்திரு அடிகளார் ஆவார்கள்.

அவர்தம் சிந்தனைகளை, எழுதிவைத்த எண்ணங்களை மணிவாசகர் பதிப்பகம் பல பெருந் தொகுதிகளாக வெளியிடுகிறது. களஞ்சியங்கள் அனைய பெருநூல்களையே வெளியிட்டு வரும் பதிப்புச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கள் அடிகளாரின் நூல்களைப் பல மடலங்களாக வெளியிடுவது அம் மாமுனிவர் தம் எண்ணங்கள் காற்றில் கரைந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகும்.