பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



155


அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி. சராசரி மனிதனால் நடை பயிலக்கூடிய அறநெறியையே கூறினார் அவர். வாழ்க்கை முறை பற்றிச் சமுதாயத்தின் சாதாரணப் படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பியே அளவில் சுருக்கமாக-தனித்தனியே-உரிய முறையில் கூறினார்.

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகின்றார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறது. திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து, நாட்டில் பலர் பேசிய-வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக்கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றி யிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.

இன்று, அள்ளித் தெளித்த தெல்லாம் கோலம் என்பது போல பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்டவேண்டிய தில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.

தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத் தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனித்த புருவத்தைப் பற்றிப் பேசுகிறார்.