பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கையும் உருவாகாது; வள்ளுவமும் வாழ்க்கையில் இடம் பெறாது.

"யான் எனதுஎன்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்."

(346)

என்றது திருக்குறள். வையகத்தில் வாழ்க்கை சிறக்க வேண்டுமா? ‘நான்’ ‘எனது’ என்ற சொற்களைத் தோற்றுவிக்கும் சமுதாய அடிப்படையை மாற்றுங்கள்! வையகம் சிறக்க வேண்டுமா? வள்ளுவத்தின் வழியில் வையகத்தை இயக்குங்கள்! "நான்” “எனது” என்ற சொற்கள் வழி அமைந்துள்ள சமய நெறிக்குப் புறம்பான வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்! அப்பொழுதுதான் தமிழ் வெற்றி பெறும்! தமிழ் வளரும்! தமிழ் வாழும்! தமிழர் வாழ்வு புகழ் பூத்த வாழ்வாக அமையும்.

6. பகுத்துண்ணாமை கொலையே!

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்புகளைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙணமின்றி இந்த அதிகார முறைவைப்புகள் திருவள்ளுவரால் செய்யப்பெறவில்லையென்றும்; பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு.

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடிவைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கம் இருக்கிறது; பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை திரும்பத் திரும்ப நினைந்தாலே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால், ஒரு நன்னெறியினைப் பலவகைகளில்-பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உயர்தலே வாழ்க்கைக்கு உற்ற முறையென்பதால் அதிகார அமைப்புகளும் சாலச் சிறந்தனவேயாம்.