பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை, ‘விருந்தோம்ப’லில் கூறக்கூடாதா? ‘ஒப்புரவறித’லில் கூறக் கூடாதா? அல்லது ‘ஈகை’யில்தான் கூறக் கூடாதா? இங்ஙனம், அங்கெல்லாம் கூறாமல், 'கொல்லாமை’ அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடக் குற்றம், உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவது, அது கொலைக்குற்றமே என்பதை உணர்த்தவே இங்குக் கூறினார்.

கூடிவாழும் மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக விளங்கும் மனிதனுக்குச் சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. ஒரு சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றிச் சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும்; அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை யென்பதல்ல.

பெற்ற செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் பலரையும் சோறிட்டும் மருந்து முதலியன வழங்கியும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமேயாகும் என்பதனை உணர்த்தவே இந்தக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கினால் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்று வினா எழுந்தால் மறுப்பார் யார்?