பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கை, மானிடர் அனைவர்க்கும் பொது. அது போலவே அனுபவங்களும் பொதுவேயாம். அறிவும் பொதுவேயாம். ஆதலால், மானிடப் பரப்படன் உறவு கலந்து வாழும்போதுதான் அறிவு தலைப்படுகிறது. மானிட உலகத்துடன் கொள்ளும் நட்புறவு நிலையானது. இந்த உறவில் ஏதாவது அடிப்படையில் மலர்தலும், பிறிதொரு வகையில் சுருங்குதலும் கூடாது. இன்று பலர் ஏதாவது ஒர் எல்லைக்குள் தம்மைச் சுருக்கிக் கொண்டு அல்லது சிறைப்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்பப் பழகுகின்றனர். இது வரவேற்க இயலாத முறை. மானிடர் அனைவரையும் முதலில் மாந்தர் என்ற நிலையில் அங்கீகாரம் செய்ய வேண்டும். எந்த ஒரு காரணமும் ஒருவரிடத்தில் உறவு கொள்ளத் தடையாக அமையக்கூடாது. உறவு கொண்டபின் விருப்பு - வெறுப்புகள் தலையெடுக்கக்கூடாது. நட்புறவு என்பது விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடந்தது.

இன்றைய மானுடம் இந்த நிலையில் வாழவுமில்லை; வாழ விரும்பவுமில்லை. வளர்ந்த விஞ்ஞானக் கருவிகள் மூலம் பூத பெளதிக உலகங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. ஆனால் மானிடரிடையில் இதயங்கலந்த நட்புறவுகள் கால்கொள்ளவில்லை. அதனால் இன்னமும் "மானுடம்” முழுமையடையாத கச்சாப் பொருளாகவே விளங்குகின்றது. இன்றைய மானுடம் பொதுமையை நாட மறுக்கிறது. அவரவரும் அவரவருடைய உணர்ச்சிகளின் வயப்பட்டே வாழ்கின்றனர். சரியான அடிப்படையில் அமையாத மானுடம் துன்புறும்; கெட்ட போரில் ஈடுபடுவோர் அழிப்பர்; அழிவர். இதுவா அறிவின் பயன்? ஆதலால், உலக மாந்தரொடு கலந்து பழகி நட்புறவினை வளர்த்துக் கொண்டு வாழ்தலே "அறிவு”. எல்லாவித எல்லைகளையும் கடந்து நேசக்கரங்களை நீட்டி வாழ்வதே அறிவு.

நாடு, மொழி, இனம், சமயம் ஆகியன வாழ்வியலில் இடம் பெற்றுள்ளன; இவை அவசியமும்கூட! ஆனால்