பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



277


11. தொடரும் துன்பம்

இனிய செல்வ!

தாய்மொழி வழிப் பயிற்சி பற்றி எழுதினோம். அறிவு தேவை! அறிவு, சிந்தனையைச் சார்ந்தது! ஒழுக்கமாக உருக்கொள்வது! அறிவு, தாய்மொழிக் கல்விவழிதான் இயலும்! தாய்மொழியின் இலக்கணப்பகுதி அன்றாட வாழ்க்கையிலேயே கற்றுக் கொள்ளப்படுகிறது! அறிவு முயற்சிக்குத் தடையாக மொழிச்சிக்கல் இருக்காது! தாய் மொழிக் கல்வி அறிவூற்றுக்குத் துணையாய மையம்! உலக நாடுகள் அனைத்திலும் தாய்மொழியே பயிற்றும் மொழி! நமது தமிழ் நாட்டில் தான் ஆங்கிலம் பயிற்று மொழி! ஏன்? திருவள்ளுவர்,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்"

என்று கூறுகிறார். இந்தத் திருக்குறளுக்கு ஊழின்பாற் பட்ட பொருள் கூறுவர். அஃது அவ்வளவு ஏற்புடையது அல்ல! வாழ்க்கை ஊழின்பாற்பட்டது என்றால் அப்புறம் ஏன் வாழ்க்கை? கல்வி, கேள்வி ஏன்? இனிய செல்வ, திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாலாக அமைந்தது ஏன்? மரபு வழிப்பார்வையை நீக்கிவிட்டு இந்த அமைப்பு முறையைப் படித்துப் பார்! புதிய பார்வை கிடைக்கிறதா? இனிய செல்வ, திருவள்ளுவர் எல்லோரையும் போல அறம் செய்யவே நினைத்தார்! அறத்துப்பால் செய்தார்! அறத்துப் பாலின் முடிவு ஊழ்! ஊழ் இயல் வந்தவுடன் திருவள்ளுவர், ஊழ்வழிப்பட்டு மானுடத்தின் வாழ்க்கை தேக்கமுறுதல் கூடாதென்று நினைக்கிறார்! ஊழினை எதிர்த்து முறியடித்து விட்டு நேர்பட வாழவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்! மானுடம் ஊழினை வெற்றிகண்டு வாழ்வியலை இயக்கவே பொருட்பாலை இயற்றுகின்றார்! ஊழினை எதிர்த்துப் போராடும் மானுடத்திற்கு அறிவறிந்த ஆள்வினையைத்