பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



287


ஆயினும் "ஒரு குலத்திற்கு ஒரு நீதி" என்று கூறும் மனுவாதி நூல்கள் வெற்றி பெற்று விட்டன.

ஆரியரும் ஆங்கிலேயரும் போட்ட பாட்டையிலேயே நமது நாட்டுத் தலைவர்களும் நடைபோட்டனர்; நடை போடுகின்றனர். மக்களின் மனப்போக்கை - உணர்ச்சிகளை (வெற்று உணர்ச்சிகளை) ஒட்டியே சென்று எளிதில் வெற்றிக் கனிகளைக் கொய்ய நினைக்கின்றனர். இதன் விளைவு நமது நாட்டில் இன்னமும் தீண்டாமை அகலவில்லை. ஏன்? நமது தலைமுறையில் அகலுமா என்பதே இன்றுள்ள பிரச்சனை. மருந்துக்குப் பழகிப்போன உடம்பு மருந்தின் பயனாகிய நோய் நீக்கத்தைத் தராது என்பர். அதுபோல சாதிகளிலேயே பழகிப்போன நமக்குச் சாதிகளை விடமுடியாத அளவுக்கு மூடத்தனம் வளர்ந்து விட்டது. மூடத்தனம் மட்டுமல்ல. முரட்டுதனமும் வளர்ந்து வருகிறது. இன்று எங்கு பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! சாதிச் சண்டைகள்! முற்போக்குத் தன்மை வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளப்படுகின்ற கட்சிகளில்கூட சாதி தொடர்பான எண்ணங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளும்கூட வழிவழியாகச் சாதிப் பெயரால் சமூக மேலாண்மையை வைத்துக் கொண்டுள்ள சமூகத்தினிடத்தில் தான் சங்கமித்திருக்கின்றன. பச்சையாகச் சாதியை தீண்டாமையைப் பின்பற்றுகின்ற - வளர்க்கின்ற மடங்களிடத்தில் அரசியல் தலைவர்களுக்குள்ள பாசம் அலாதியானது. காரணம் அவர்கள் பாடங்களிலிருந்து "ரஷிப்பவர்கள்" அல்லவா! .

இலக்கியத்துறையில் திருக்குறள் தோன்றி "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று நெறி காட்டிய தமிழகத்தில் மீனாட்சிபுரம், புளியங்குடி, விழுப்புரம், தோப்பூர் என்று சாதிக் கலவரங்கள் நடந்த இடங்களைப் பட்டியல் போட வேண்டியிருக்கிறது. இன்று உடனடியாகச் "சாதி” என்ற புற்றுநோய்க்கு மருத்துவம் செய்யாவிடில் இது இரத்தப் புற்றாக மாறிவிடும்! எச்சரிக்கை!