பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத் தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் 'விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.

இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி, கலை வழிபட்ட உறவுகளும் வளரும்; தொழில், பொருள் வழிப்பட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத் துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.

மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல. தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும், பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய