பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



69



வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான். அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடி வாழ்தல் எளிதான செயலா? அம்மம்மா! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும், பாம்பினைப் பழக்கிவிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயல வேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கனவல்ல.

பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிப்படுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்றுகூறி ஆறுதல் பெறுவர். அதனால் நமக்கென்ன குறை?

குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்புப் பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொறுத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும், வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,