பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



77



அழுக்காற்றை அகற்றும் வழி, நல்லவர்களை - வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வது தான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிகைகளைப் பார்த்துப் புழுங்குதலைத் தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

எப்போதும் நல்லனவற்றையே நாடுதல்,நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்காற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம் - குறைகள் இருக்கும். எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும்; நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது; மலர்களையே எடுக்க வேண்டும்.

அழுக்காறு என்ற தீய குணத்தினாலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை; பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா. வெகுளி இன்னாத சொல்லல், கலகம் எல்லாமேயாம்.

ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுக்காறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக் கண்டு மகிழ்க! நீயும் வாழ முயலுக! நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!