158
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1. அருளுடைமையால் உயிர்கள் பேணிக் காக்கப் பெறுதலால் காக்கப் பெற்ற உயிர்கள்-மக்களைத் தொழுது வாழ்த்துகின்றன.
2. புலால் உண்ணாமையால் விலங்கு முதலிய உயிரினங்களும் கொல்லாமையால் மக்களும் பயனடைகின்றனர் என்பதறிக.
3. எல்லா உயிர்களும் மகிழ்ந்து தொழுது வாழ்த்துவதனை எண்ணிப் பார்த்துக் கொலையைத் தவிர்த்திடுக! ஊன் உணவினைத் தவிர்த்திடுக!
தவம் - பொறிகள் வழி உணர்வு செல்லாது நோன்பு முதலியவற்றை ஏற்று ஒழுகுதல். மேலான செயல் என்ற பொருள் தரும் ‘தவ’ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்த சொல் இது.
புலன்கள், அழுக்காற்று நெறியில் செல்லாமல் அருள் நெறியில் செல்லப்-பக்குவப்படுத்த, நன்னெறியினை எண்ணுதல்-சிந்தித்தல்.
தற்சார்பான உணர்வுகளிலிருந்து விடுதலைபெற, பிறர் நலம் பேணும் தொண்டுகளில் ஈடுபடுதல்.
‘உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.’
தனக்கு வந்த பசி, பிணி இன்ன பிறவற்றைத் தாங்கிக் கொள்ளுதல்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை என்ற அளவினதே தவம்.
பசி முதலியனவற்றைத் தாமே நீக்கிக்கொள்ளும் திறனோ, அவற்றைத் தாங்கிக்கொள்ளும் திறனோ இல்லாதவர்கள் மற்றவர்களுக்குத் தீங்குசெய்தாவது தீர்த்துக் கொள்ள எண்ணுவது தவமாகாது.