பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆக, முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சியைப் பற்றி-குடியாட்சிக்குரிய இயல்புகளையெல்லாம் பற்றித் தெளிவாகத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

இது அவருடைய அரசியலிலே மிக முக்கியமான ஒரு செய்தி. இப்பொழுது அரசு என்றால் ஒரு அதிகார அமைப்புடையதாகக் கருதப்படுகின்ற மனப்போக்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உள்ளே போகவேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்ணிலாவது படவேண்டும் என்ற ஒரு பேரவா மனத்திலே உந்திக்கொண்டு இருப்பதாலே நமது அரசியல் உலகம் சழக்குகளாக - சேறாகப் போவதைப் பார்க்கிறோம். அஃதோடு சில கடமைகள் உடைய பணிமனையாக மட்டும் இருக்குமானால் இவ்வளவு பெரிய போட்டி, பொறாமை, சூது, காய்ச்சல் பாடு அதிலே தோன்றா.

திருவள்ளுவர் இதை நினைவிலே வைத்துக்கொண்டு சொல்கிறார். ‘நீ குடிகளைத் தழுவி ஆட்சி செய்ய வேண்டும். நீ குடிகளுக்குச் சில நன்மைகள் செய்கிறாய் என்றால் அது உனது கடமை, உன்னுடைய பொறுப்பு' என்று கருதினார். இது அவருடைய ஆட்சியிலே இருக்கின்ற அரசியல் சிறப்பு என்பதை மறந்துவிடக் கூடாது.

கிட்டத்தட்ட இன்றைய மக்களாட்சி மரபு அரசும் இதுவும் ஒத்து இருக்கிறது. அடுத்து, இந்த அரசுக்குப் பொருள் என்ன என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார்.

இன்றைய தினம் பத்திரிகையில் தலைப்புச் செய்தியில் வரி இல்லை என்று செய்தி வந்துள்ளது. அரசு வரவு செலவுத் திட்டத்திலே வரி விதிக்கவில்லை.

நம்முடைய திருவள்ளுவர், அரசுக்குப் பொருள் வருவாய் எப்படி, என்ன என்பதைச் சொல்லுகிறார், பொருள் இயலிலே.