பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



187



மலையிலே ஏற்றி வைக்கப்படுகின்ற விளக்கைப் போன்றது அரசு. வீட்டிற்குள்ளே ஏற்றிவைக்கப்பட்ட விளக்கைப் போன்றவை தனி மனிதனின் தவறுகள். ஆக, மலையிலே ஏற்றிவைக்கப்பட்ட அந்த விளக்கு அணைந்து விட்டால், ஊர் முழுவதிலும் இருள் சூழ்கிறது. வீட்டினுள்ளே விளக்கு அணைந்துவிட்டால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுந்தான் இருட்டு. அரசு என்பது நடுவூரிலே ஏற்றிவைக்கப்பட்ட விளக்கைப் போன்றது. அது அணைந்தால், நாட்டிலே-நகரத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் அல்லல் படுவார்களே என்பதினாலே அரசினுடைய ஒழுக்கத்திலே திருவள்ளுவருக்கு நிறைந்த நம்பிக்கை,

ஆதலினாலே அவர் சொல்லுகிறார்,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்’

என்று.

ஒருவன் தவறு செய்கிறான். தவற்றுக்குத் தண்டனை உண்டு. ஆனால் அரசு முதலில் யோசிக்க வேண்டும், ‘இந்தத் தவறுகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையில் நம்முடைய ஆட்சியும் அரசும், அமைந்திருக்கின்றனவா?” என்று.

அந்த ஆட்சியினுடைய அமைப்பு, சமூகத்தினுடைய அமைப்பு, நல்லவையாக இருக்க வேண்டும்.

அவனுக்கு நல்ல காவல் வேண்டும். எல்லாவற்றையும் விட உத்தரவாதம் வேண்டும். வள்ளுவருக்கு அதிலே அசைக்க முடியாத நம்பிக்கை.

நான் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறேன். எனக்கு வாழ்வதற்கு உத்தரவாதம் இந்தச் சமூகமும், இந்த அரசும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் உத்தரவாதம் கொடுப்ப தென்பது அருமையான செய்கை.