பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செயல்களை நம்முடைய அறநூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒருகால் உலக சமாதானம் ஏற்பட்டு, உலகத்தில் எல்லா நாடுகளும் படைகளை வைத்துக் கொள்வதில்லை என்ற நிலைமை ஏற்பட்டு, அந்த நிலைமை ஏற்பட்ட பிறகு பகை வழியாகக் கொள்ளுகின்ற பொருள் தவறு என்று சொன்னால், திருவள்ளுவருக்குப் பிறகு அவர் மற்ற அதிகாரங்களில் காட்டிய அன்பு, அருள், நாகரிகம், முற்றி முதிர்ந்து இந்தச் செயற்பாட்டுக்கு அவசியம் இல்லை என்று ஆகிவிட்டது என்று பொருள் கொள்ளலாம்.

இலக்கிய உலகத்தில் நம்முடைய கையில் இருந்த கருத்துகள், அரசியல் அன்பர்கள், அமைச்சர்கள் கைகளுக்குச் சென்றிருப்பதால், திருக்குறள் விரைவில் நாட்டு இலக்கியமாகும் என்ற நம்பிக்கையை நாம் பெறுகின்றோம்.

அது இந்திய நாட்டு இலக்கியமாக மாறுவதற்கு முன்பு தமிழ் நாட்டிலே, எந்தத் துறைக் கல்லூரியாக இருந்தாலும், எந்தத் துறைப் படிப்பாக இருந்தாலும், எல்லாப் பள்ளிக் கூடங்களிலும், எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரியாயினும்கூட, ஒரு குறிப்பிட்ட பகுதி திருக்குறளைப் பாடமாக வைத்து, எல்லோரும் பயிலுதல் என்கிற முறையை முதலில் உண்டாக்கினால் அது இந்திய நாடு முழுவதும் பரவுவதற்குரிய முதல் வாய்ப்பைப் பெறும்.